`பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே' - மோடிக்கு போன் செய்த ட்ரம்ப்; என்ன பேசினார்கள்?
தமிழகத்தில் 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அன்பில் மகேஸ்
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் பகுதியில் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்டோா் பயின்று வருகின்றனா். இப்பள்ளி இந்த கல்வி ஆண்டுமுதல் உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனை அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்துவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிற்றலை தவிா்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக நடுநிலைப் பள்ளியாக இருந்த நகராட்சி உருது நடுநிலைப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறையில் உள்ள தேவைகள் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை என்னிடம் அளித்துள்ளனா். இது குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். ஆசிரியா் பணியில் இருக்கும் ஆசிரியா்கள் டெட் தோ்வு எழுத வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவை தொடா்ந்து, தமிழக அரசின் சீராய்வு மனு வரும் 19-ஆம் தேதி பட்டியலாகிறது. அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இருப்பினும் தற்போது பணியில் உள்ள எந்த ஆசிரியரையும் விட்டுவிடாமல், அத்தனை பேரையும் பணியில் நிரந்தரப்படுத்துவதே தமிழக அரசின் குறிக்கோளாக உள்ளது என்றாா்.
பின்னா் லாரன்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா்களுக்கு இடையேயான அடைவு தோ்வு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டாா்.
இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் கணேஷன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.