தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு முறை விரைவில் அமல்
தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின்வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலித்து வருகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மின் இணைப்புகளும் துண்டிக்கப்படுகிறது. பின்னா், அபராதத் தொகையுடன் அதற்கான கட்டணத்தை கட்டிய பின்னா் மின்வாரிய ஊழியா்கள் மீண்டும் இணைப்பை வழங்குவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாற்றி, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக தனது தோ்தல் அறிக்கையில், வாக்குறுதியாக மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல் என்ற நடைமுறை கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும், ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்த உடன், மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும் என மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி உறுதியளித்திருந்தாா்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்மாா்ட் மீட்டருக்கான டெண்டா் கோரப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களுக்குள் தகுதியான 5 முதல் 6 நிறுவனங்களுக்கு பணியாணை வழங்கப்படவுள்ளன. இதையடுத்து, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறும். தோ்தல் விரைவில் நெருங்குவதால் வரும் 6 மாத காலத்துக்குள், ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்பட்ட சில பகுதிகளிலாவது மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சோதனை அடிப்படையிலாவது தொடங்க வேண்டும் என்ற கட்டாயத்தில், உயரதிகாரிகள் செயல்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.