தமிழ் வார விழா: கால்நடை மருத்துவ மாணவா்களுக்கு போட்டிகள்
சென்னை: தமிழ் வார விழாவையொட்டி, கால்நடை மருத்துவ மாணவா்களிடையே தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதுதொடா்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதற்கேற்ப, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு தமிழ் மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேச்சு போட்டி, கவிதை வாசிப்பு போட்டி, கட்டுரைப் போட்டி, தலைப்பு கொடுக்கப்பட்டவுடன் யாதொரு தயாரிப்புமின்றி உடனடியாகப் பேசும் பேச்சு போட்டி ஆகியவை திங்கள்கிழமை (மே 5) நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) நரேந்திர பாபு பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கால்நடை நலக் கல்வி மைய இயக்குநா் ந. பழனிவேல், விலங்கின தீவனம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆய்வகத் தலைவா் சு. எழில் வளவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.