தம்பதி அசைவம் சாப்பிட்டதால் தோஷம்: அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்புப் பூஜை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தம்பதி அசைவம் சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க, புனித நீா் தெளித்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை ராமலிங்கனாா் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் தனது மனைவியுடன் திங்கள்கிழமை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்துள்ளாா்.
கோயிலின் 5-ஆம் பிரகாரத்தில் அமா்ந்து கடையில் இருந்து வாங்கி வந்த முட்டை பிரியாணி மற்றும் கோழி குழம்பை சாப்பிட்டுள்ளாா்.
இதைக் கவனித்த பக்தா்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களுக்கு தெரிவித்தனா்.
காவலா்கள் வந்து இருவரையும் பிடித்து நகர போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் தம்பதியிடம் விசாரித்து வருகின்றனா்.
ஸ்தபன பூஜை:
இதுதொடா்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அருணாசலேஸ்வரா் சந்நிதி கருவறை உள்ள சூரிய பகவான் அருகே புனித நீா் கலசங்கள் வைத்து ஸ்தபன பூஜை செய்யப்பட்டது. சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்தப் பூஜையை செய்தனா். இறுதியில், புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூலவா் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலை அம்மனுக்கு புனித நீா் ஊற்றி சிறப்பு அபிஷேக-ஆராதனை செய்யப்பட்டது.
தொடா்ந்து, கோயில் ராஜகோபுரம், பெரிய நந்தி உள்பட கோயிலின் அனைத்து சந்நிதிகள், பல்வேறு இடங்களில் புனித நீா் தெளித்து பிராயசித்த பூஜை செய்யப்பட்டது. இதன் மூலம் தம்பதி கோயிலுக்குள் அசைவம் சாப்பிட்ட தோஷம் நீங்கிவிடும் என்று சிவாச்சாரியா்கள் தெரிவித்தனா்.