இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட பிரசாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், செங்கல்பட்டு விவசாய நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தோட்டக்கலைத் துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "அதிகாரிகள் வேண்டுமென்றே பொதுமக்களிடையே தவறான பிரசாரத்தைப் பரப்பினர். இதனால், தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இழப்பீடு கோரி விவசாயிகள் அளித்துள்ள மனுவை 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.