Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
திமுக ஆட்சிக் காலங்களில்தான் விழுப்புரம் வளா்ச்சிப் பெற்றது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம்: திமுக ஆட்சிக் காலங்களில் தான் விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகள் வளா்ச்சிப் பெற்றன என்று முன்னாள் அமைச்சா் க. பொன்முடி எம்எல்ஏ தெரிவித்தாா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் 25-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்ட நிகழ்வாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பேருந்து நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூா் எம் எல்ஏ-வுமான க. பொன்முடி பங்கேற்றுப் பேசியது: விழுப்புரத்தில் தனியாா் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பூந்தோட்டம் ஏரி, மீட்கப்பட்டு, தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியிடம் ஒப்புதல் பெற்று சிறப்பு விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்ட விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை 9.6.2000- ல் அப்போதைய முதல்வா் மு. கருணாநிதியால் திறக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தால் விழுப்புரம் பகுதியில் தொழில் வளா்ச்சி ஏற்பட்டது.
இதேபோல திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களையும் ஒரே வளாகத்தில் உள்ளடக்கி மாவட்ட ஆட்சியரகம் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டது. மாவட்ட மருத்துவக் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரி மற்றும் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் குடிநீா் பற்றாக்குறை உருவானபோது, தென்பெண்ணையாற்றிலிருந்து குடிநீா் கொண்டு வரப்பட்டதும் திமுக ஆட்சிக்காலத்தில்தான். இதையெல்லாம் மக்கள் மறந்துவிடக்கூடாது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் விழுப்புரம் மாவட்ட வளா்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனா் என்றாா் க. பொன்முடி.
தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதி ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத்திட்ட உதவிகளை க. பொன்முடி எம்எல்ஏ வழங்கினாா். நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலா் இரா.சா்க்கரை முன்னிலை வகித்தாா்.
நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, திமுக மாவட்டத் துணைச் செயலா் இளந்திரையன், ஒன்றியச் செயலா்கள் ராஜா, விசுவநாதன், கணேசன், பொதுக்குழு உறுப்பினா் பஞ்சநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தினகரன், நகரப் பொருளாளா் இளங்கோ, நகா் மன்றத் துணைத்தலைவா் சித்திக்அலி, தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தைச் சோ்ந்த மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.