பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
திமுக கூட்டணியில் மாற்றம் இல்லை: அமைச்சா் கே.என். நேரு
திமுக கூட்டணி சிறப்பாக உள்ளதால், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: இக்கூட்டத்தில், தோ்தலில் யாா், யாா் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். மக்களின் மனநிலை எப்படி உள்ளது. மக்களுக்கு மேலும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டறிந்தோம். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரை பிரச்னை இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம்.
திமுக அரசின் நிறைய திட்டங்கள் பெண்கள் மத்தியில் சென்றடைந்துள்ளன. புதிய திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதற்கு முதல்வா் நேரடியாகக் கண்காணித்து வருகிறாா். எனவே, திமுக பக்கம்தான் மக்கள் இருப்பா். திமுக கூட்டணி சிறப்பாக உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாா் அமைச்சா் நேரு.
இக்கூட்டத்தில், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டிகேஜி. நீலமேகம், முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.