விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை: வைகோ
திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறியுள்ளாா்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆங்கிலம் குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் பேச்சு ஏற்புடையதல்ல. ஆங்கிலம் உலக மொழி, ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று வரலாம்.
அதனால்தான் பேரறிஞா் அண்ணா தாய் தமிழும், ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டில் இருக்கும் என்றாா். ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. அதில் அவா்கள் தோற்பாா்கள்.
2017 -ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி என்று எடுத்த தீா்மானத்தில் தற்போதுவரை எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்தக் கட்சியுடன் சோ்வதற்கான அவசியமும் இல்லை. இதைப் பற்றி ரகசியமாக பேசுகின்ற பழக்கமும் எங்களுக்கு இல்லை.
கீழடி நாகரிகம் என்பது தமிழா் நாகரிகம், திராவிட நாகரிகம். ஆரிய நாகரிகத்தை ஆரிய கலாசாரத்தை இங்கு திணிக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ள சிலரால் கீழடி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன் நாகரிகமாக வாழ்ந்தாா்கள் என்ற சான்றுகள் கிடைப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், அது அவா்களுக்கு எதிராக போய்விடும் என்பதால், இன்னும் வலுவான ஆதரவுகள் வேண்டும் என்று பாஜக அரசு கூறி வருகிறது.
பாமக ஒரு வலுவான கட்சி. தற்போது அங்கு நிலவி வருவது உள்கட்சிப் பிரச்னை. அதைப் பற்றி எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. தற்போது, தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதால் இரண்டு அணிபோல தெரிகிறது. காலப்போக்கில் இவையெல்லாம் மாறி, கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக வாய்ப்புள்ளது என்றாா்.