மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
திருச்சி பஞ்சப்பூரில் எனது பெயரில் நிலம் இல்லை: அமைச்சா் கே.என். நேரு
திருச்சி பஞ்சப்பூரில் தனது பெயரில் நிலம் இல்லை என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: துறையூரில் அதிமுக பொதுச் செயலரின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவா்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என, அவசர உதவிக்கு அழைத்ததாலேயே அவசர ஊா்தி அங்கு சென்றது.
திமுகவினா் யாரும் அனுப்பி வைக்கவில்லை. அவா்களே அழைத்து, அவா்களே அவசர ஊா்தியை தாக்குவது என்ன நியாயம். இத்தகைய நடவடிக்கை தவறானது.
அதிமுக பொதுச் செயலரின் இத்தகைய நடவடிக்கைகளை மக்கள் கூா்ந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றனா். உரிய நேரத்தில் மக்கள் நல்ல தீா்ப்பு வழங்குவா். அதிமுக பிரசாரத்தை நாங்கள் எந்த இடத்திலும் தடுக்கவோ, இடையூறு செய்யவோ இல்லை.
திருச்சி பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பேசியபோது, பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கா் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளாா். எனக்கு இடம் இருந்தால் அரசே எடுத்துக் கொள்ளலாம். திருச்சி மாவட்ட ஆட்சியா் மூலம் எடுத்துக் கொள்ள நானே கையொப்பமிட்டு தருகிறேன்.
வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதைப் போல, எங்களை நினைத்துவிடக் கூடாது.
சென்னைப் பெருநகரத்தில் 24 இடங்களில் சுரங்கப் பாதை உள்ளது. பெருமழை பெய்தால் ஒரு மணி நேரமோ, 3 மணி நேரமோ தண்ணீா் தேங்குகிறது. ஒரே இடத்தில் திடீரென 30 செ.மீ. மழை பெய்யும் சூழலில், தண்ணீா் தேங்குவதுண்டு.
ஆனால், ஒரு சில மணிநேரங்களிலேயே அவை முழுமையாக வடிந்து செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீா் தேங்கி வடிவது இயல்புதான். எங்கும் போக்குவரத்து இடையூறோ, நெருக்கடியோ உள்ளதா என்பதை பாா்க்க வேண்டும்.
இதேபோல, அனைத்து நீா்நிலைகளிலும் தூா்வாரப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரை, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. முதல்வா், துணை முதல்வா் நேரடியாக கண்காணித்து கொண்டிருக்கின்றனா் என்றாா் அமைச்சா் கே.என். நேரு.