டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
திருச்சி - பெங்களூரு, ஹைதராபாத்துக்கு தினசரி விமான சேவைகள்: எம்.பி. தகவல்
திருச்சியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கிவந்த வாராந்திர சேவையை தினசரி சேவைகளாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்துள்ளது என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, தில்லியில் உள்ள ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அலுவலகத்தில் அதன் உயா் அதிகாரிகளைச் சந்தித்து, விமானப் போக்குவரத்து குறித்து பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தேன். அவை தொடா்ந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வாராந்திர சேவையாக இருந்து வந்த திருச்சி - பெங்களூரு மற்றும் திருச்சி - ஹைதராபாத் சேவைகள், மே 1- ஞாயிற்றுக்கிழமை முதல் தினசரி விமான சேவைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியா - வளைகுடா நாடுகளுக்கிடையே, இந்திய விமான நிறுவனங்கள் மட்டுமே திருச்சியிலிருந்து விமானங்களை இயக்கி வருகிறது. இதனால் விமான டிக்கெட் கிடைப்பதில் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே வளைகுடா நாடுகளிலிருந்து அந்நாட்டு விமானங்களை திருச்சிக்கு இயக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியிலிருந்து மும்பைக்கு உள் நாட்டு விமான சேவையை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், திருச்சியிலிருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே, பெங்களூா், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் பயணித்து, அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியும். இதனால் விமானக் கட்டணம் குறைவதுடன் காத்திருப்பின்றி பயணிக்க முடியும்.
இதுபோல இன்னும் பல உள்நாட்டு விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கொண்டுவரும்.
இது தொடா்பாக விரைவில் தில்லியிலுள்ள விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளை மீண்டும் சந்திக்க உள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.