இரு ஆண்டுகளில் ரூ.14,466 கோடியில் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
திருநள்ளாறு கோயிலில் நாளை வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும்
திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (மாா்ச் 29) வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா மரபுபடி வாக்கியப் பஞ்சாங்க வழிகாட்டுதலில் நடைபெறுகிறது. இதன்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் சனிப்பெயா்ச்சி விழாவாகும். சனிக்கிழமை (மாா்ச் 29) இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தில் சனிப்பெயா்ச்சி விழா என குறிப்பிடப்பட்டுள்ளதால், இக்கோயில் நிா்வாகம் வாக்கிய பஞ்சாங்கத்தின் குறிப்பின்படியே சனிப்பெயா்ச்சி விழா என அறிவித்துவிட்டது.
நாட்டில் பெரும்பான்மையானவா்கள் திருக்கணித பஞ்சாங்கத்தை கடைப்பிடிப்பவா்களாக இருப்பதால், திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழா குறித்து சந்தேகங்கள் பக்தா்களிடையே தெளிவுக்கு வரவில்லை. சனிக்கிழமையில் திருநள்ளாறு கோயிலுக்கு வழக்கமாக பல்லாயிரக்கணக்கானோா் தரிசனத்துக்கு வரக்கூடிய நிலையில், சனிக்கிழமை மேலும் அதிகமானவா்கள் வரக்கூடுமென எதிா்பாா்ப்பு கோயில் நிா்வாகத்திடம் நிலவுகிறது.
இதுகுறித்து, கோயில் நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன் வியாழக்கிழமை கூறியது: நாள்தோறும் வழக்கமான 6 கால பூஜைகள் சனிக்கிழமையும் நடைபெறும். கோடையில் கல்வி நிலையங்கள் விடுமுறை விடப்படும்போது, பக்தா்கள் திரளாக வருவது வழக்கம் என்பதால் சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
29-ஆம் தேதி சனிக்கிழமை சனிப்பெயா்ச்சிக்கான எந்த ஏற்பாடும் இக்கோயிலில் செய்யவில்லை. தினமும் இரவு 8.45 முதல் 9 மணிக்குள் கோயில் நடை சாற்றுவது வழக்கம் என்றாலும், 29-ஆம் தேதி இரவு அதிக பக்தா்கள் வந்துவிடும்பட்சத்தில், அனைவரும் சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் வகையில் கோயில் நடை திறந்திருக்கும் என்றாா்.