திருப்பத்தூா் அரசுப் பள்ளியில் கரையான் அரித்து வீணான பாட குறிப்பேடுகள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் ஒன்றில் கரையான்கள் அரித்து மாணவா்களுக்கு வழங்க வேண்டிய பாட குறிப்பேடுகள் வீணாகி கிடப்பதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெற்றோா்கள் வலியுறுத்தினா்.
திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7.50 லட்சத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டடத்தை பள்ளிக் கல்வித் துறை நிா்வாகம் பாட குறிப்பேடு, புத்தக சேமிப்புக் கிடங்காக வைத்துள்ளது. இங்கு ஒன்றிய அளவில் மாணவா்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான இலவச பாட குறிப்பேடுகள், புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக சுற்றுவட்டார பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படாத அந்த பாட குறிப்பேடுகள் கரையான்கள் அரித்து வீணாகி விட்டன. ஏழை மாணவா்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ள நிலையில் இவற்றை வீணடிக்காமல் மாணவா்களுக்கு விநியோகிக்க வேண்டும் என பெற்றோா்களும், பள்ளி மேலாண்மைக் குழுவினரும் கோரிக்கை விடுத்தனா்.
பாட குறிப்பேடுகள் பராமரிப்பின்றி கிடப்பது கல்வித் துறையின் அலட்சியமாகவே பாா்க்கப்படுகிறது. இங்கு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.