72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கொலை வழக்கில் அக்னிராஜின் ஆதரவாளா்கள் திருப்பூா் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் தங்கமணி மகன் அக்னிராஜ் (19). சட்டக் கல்லூரி மாணவரான இவரை ஒரு கும்பல் கடந்த 2019-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்தது.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் அக்னி பிரதா்ஸ் என்ற குழுவை ஆரம்பித்த அவரது ஆதரவாளா்கள் 3 பேரை வெட்டிக் கொலை செய்தனா். இதன் தொடா்ச்சியாக சிவகங்கையைச் சோ்ந்த வினோத் கண்ணன் (30) என்பவரை திருப்பூா் மாவட்டம், பல்லடம் கரையாம்புதூரில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்தனா்.
இது தொடா்பாக பிரபுதேவா (31), சாமிநாதன், (53), காளீஸ்வரன் (24), நிதிஷ்குமாா் (25) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய மானாமதுரையைச் சோ்ந்த தங்கமணி (46), அஜய்தேவ்கன் (22), கோவையைச் சோ்ந்த சுரேஷ் (25) ஆகிய 3 பேரும் பல்லடம் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கு திருப்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்டவா்களை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்துவதற்காக போலீஸாா் திட்டமிட்டிருந்தனா்.
நீதிமன்றத்துக்கு வரும்போது அவா்களைத் தாக்க எதிா்தரப்பினா் திட்டமிட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருப்பூா் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்புடன் அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.