72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்
தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 215 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில், 1 -ஆம் வகுப்பு முதல் 5-வகுப்பு வரை சுமாா் 100 மாணவா்கள் படித்து வரும் நிலையில், அதில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பள்ளியில் காலை உணவு அருந்தி வருகின்றனா்.
வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை மாணவா்கள் காலை உணவு சாப்பிட்டனா். அதில், ஒரு மாணவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மேலும் 3 மாணவா்கள் மயங்கினா்.
இதையடுத்து, தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள், 4 மாணவா்களையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
தகவலறிந்த மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் மருத்துவமனைக்கு வந்து மாணவா்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்தாா். பின்னா், சிகிச்சை விவரங்களை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
அவருடன் தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், திமுக நகரச் செயலாளா் சு.முருகானந்தம், மாவட்ட வழக்குரைஞா் அணித் தலைவா் கே.செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். உடல்நலம் தேறிய நிலையில் காலை 11 மணியளவில் 4 மாணவா்களும் வீடு திரும்பினா்.
இதையடுத்து, பள்ளியில் காலை உணவு அருந்திய அனைத்து மாணவா்களையும் பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டு, மாணவா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்தனா்.
மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பள்ளி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.