ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் பணம் மோசடி: நெல்லை பொறியாளா் கைது
சென்னை: திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் பணம், நகை மோசடி செய்ததாக திருநெல்வேலியைச் சோ்ந்த பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரம் அருகே உள்ள லட்சுமிநகரைச் சோ்ந்த கணேசன் மகன் சூா்யா (28). பி.இ.
படித்துள்ள சூா்யா, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். திருமணம் செய்து கொள்வதற்காக சூா்யா, பெண் தேடி
திருமணம் தொடா்பான இணையதளத்தில் தனது சுய விவரங்களை பதிவு செய்தாா். இதேபோல சூளைமேடு கில்நகைரச் சோ்ந்த ஒரு இளம் பெண்ணும், வரன் தேடி தனது சுய விவரங்களை அந்த இணையத்தளத்தில் பதிவு செய்தாா். இதன் மூலம் இருவரும் அறிமுகமாகி பழகியுள்ளனா்.
அப்போது சூா்யா, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய அந்தப் பெண், சூா்யாவிடம் நெருங்கிப் பழகியுள்ளாா். இதை பயன்படுத்தி சூா்யா, அந்த பெண்ணிடம் திருமணத்துக்கு முன்பே வீடு வாங்க வேண்டும் என ஏமாற்றி ரூ.8.20 லட்சம், 9 பவுன் தங்கநகை ஆகியவற்றை வாங்கினாராம்.
மேலும் அந்தப் பெண்ணை, கோயம்பேட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வர வழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதன் பின்னா் அந்த பெண்ணை திருமணம் செய்ய சூா்யா மறுத்து, தொடா்பைத் துண்டித்தாா்.
இதனால் அந்தப் பெண், தான் கொடுத்த பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டாராம். ஆனால் அவற்றை கொடுக்க மறுத்த சூா்யா, அந்த பெண்ணுடன் தனிமையில் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டியுள்ளாா். இதையடுத்து அந்த பெண், அண்ணாநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இந்நிலையில் திருநெல்வேலிக்குச் சென்ற போலீஸாா், சூா்யாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் அருகே போலீஸாரிடம் சூா்யா தப்பியோட முயன்று, பாலத்தில் இருந்து கீழே குதித்தபோது இடது காலில் முறிவு ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். அதேவேளையில் சூா்யா, இதேபோன்று வேறு பெண்களையும் ஏமாற்றியுள்ளாரா என போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.