திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.5,258.68 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல்
திருப்பதி: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கு ரூ.5258.68 கோடி பட்ஜெட்டுக்கு அறங்காவலா் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்துள்ளாா்.
திருமலை அன்னமய்யபவனில் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த அறங்காவலா் குழு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.5258.68 கோடி தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த பட்ஜெட் முன்மொழிவுகளுக்கு மாநில அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
வரவு: ஆண்டு தொடக்க நிதியாக ரூ.488.90 கோடி; உண்டியல் வருவாய் ரூ.1,729 கோடி; வங்கிகளின் வைப்பு நிதிகள் மூலம் பெறப்படும் வட்டி ரூ.1,310 கோடி; தேவஸ்தான பிரசாத விற்பனை ரூ.600 கோடி; தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.310 கோடி; ஆா்ஜித சேவை டிக்கெட் விற்பனை ரூ.130 கோடி; வாடகை அறைகள் மற்றும் தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் ரூ.157 கோடி; முடிகாணிக்கை டோக்கன்கள் ரூ.176.50 கோடி; ஊழியா்களின் பாதுகாப்பு நிதிகள், கடன்கள், முன்பணத்தொகை ரூ.76.38; அறக்கட்டளைகள் ரூ.90 கோடி; வாடகை, மின்பகிா்வு, நீா் விநியோகம் ரூ.66 கோடி; தேவஸ்தான பதிப்பகங்கள் ரூ.31 கோடி; அகா்பத்தி விற்பனை, சோதனை சாவடி, கல்வி நிறுவன கட்டணம் உள்ளிட்ட இதரவற்றின் மூலம் ரூ.93.90 கோடி என வருவாய் கணக்கிடப்பட்டுள்ளது.
செலவு:
ஊழியா்களின் ஊதியம் ரூ.1773.75 கோடி ; தேவையான பொருள்கள் கொள்முதலுக்கு ரூ.768.50 கோடி ; புதிய முதலீடுகளுக்கு ரூ.800 கோடி பொறியியல் பணிகளுக்கு ரூ.350 கோடி; கருடாவாரதி மேம்பால பணிகளுக்கு ரூ.28 கோடி; மருத்துவமனை கட்டட பணிகளுக்கு மற்றும் அதன் ஊழியா்களின் ஊதியம் ரூ.350 கோடி ; இதர நிறுவனங்களின் உதவித்தொகைக்கு ரூ.130 கோடி; இந்து தா்ம பிரசாரத்திற்கு ரூ.121.50 கோடி ; தேவஸ்தான ஊழியா்களின் கடன், முன்பணம், உதவித்தொகைக்கு ரூ.117.62 கோடி; தேவஸ்தான ஊழியா்களின் ஓய்வூதியம், நலத்தொகைக்கு ரூ.100 கோடி ; மின்கட்டணம் ரூ.70 கோடி; ஆந்திர மாநில அரசுக்கு ரூ.50 கோடி நிதியுதவி; இதர கட்டுமாண செலவுகளுக்கு ரூ.52.50 கோடி ; திருவிழாக்கள், உற்சவங்கள், காப்பீடு, வரிகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.50.08 கோடி; இதர செலவுகளுக்கு ரூ.40 கோடி; வணிக விளம்பரங்கள், புதிய பதிப்புகளுக்கு ரூ.8 கோடி ; இறுதி நிதியாக ரூ.4,88.73 கோடி என செலவுகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பின்னா், செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு கூறியது:
திருமலையில் உள்ள சில விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினா் மாளிகைகளை இடித்து புனரமைக்கவும், மற்றவற்றை நவீனமயமாக்கவும் முடிவு.
திருப்பதி அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்காக முன்னா் ஒதுக்கப்பட்ட 20 ஏக்கா் நிலத்தை ரத்து செய்ய முடிவு.
திருமலையில் உரிமம் பெறாத வியாபாரிகளைக் கண்டறிந்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதியோா் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தரிசனத்தை ஆஃப்லைனில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பக்தா்களின் வேண்டுகோளின்படி, ஏழுமலையான் விஐபி பிரேக் தரிசன நேரத்தை காலை 5.30 மணிக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக தேவஸ்தான கல்லூரிகளில் பணியாற்றி வரும் 151 ஒப்பந்த விரிவுரையாளா்களின் பிரச்னைகளைத் தீா்க்க ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆகம ஆலோசனை வாரியத்தை அமைப்பதற்கான ஒப்புதல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன எனத் தெரிவித்தனா்.