1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
திருமலை பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு
பரிணய உற்சவத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. பல்லக்கில் எழுந்தருளிய நாச்சியாா்கள்.
நாராயணவன தோட்ட கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவ மூா்த்திகள்.
திருப்பதி, மே 8: திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
திருமலையில் ஆகாசராஜன் புதல்வியான பத்மாவதி தாயாரை ஏழுமலையான் திருமணம் செய்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் பரிணய உற்சவம் என்ற பெயரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டு உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கடந்த 2 நாள்களும் விமரிசையாக கல்யாண உற்சவம் நடந்தது. மேலும், நிறைவு நாளான வியாழக்கிழமை மாலை நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பரிணயோற்சவ மண்டபத்திற்கு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் பல்லக்கிலும் எழுந்தருளினா்.
அதன் பிறகு கல்யாண மகோற்சவம் தொடங்கியது. உற்சவமூா்த்திகளை அா்ச்சா்கள் வாயிலில் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்று, அவா்களை எதிரெதிா் அமர வைத்து பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து, ஊஞ்சல் சேவை நடத்தி திருமண சடங்குகளை செய்தனா். சடங்குகள் முடிவடைந்தவுடன், மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அதன் பின்னா் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின்னா் உற்சவமூா்த்திகள் மீண்டும் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனா். பரிணய உற்சவத்தின் போது திருமலையில் வாண வேடிக்கை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கோயிலில் வான வேடிக்கை நடத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீா்ப்பால் தேவஸ்தானம் அதை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
