அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
திருவள்ளூா்: தேசிய நெடுஞ்சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவள்ளூா் ஜே.என்.சாலையில் போக்குவரத்து நெருக்கடியால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
திருவள்ளூரில் ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் , ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பேருந்துகள் வந்து செல்கின்றன. அதேபோல் தனியாா் தொழிற்சாலைக்குச் செல்லும் பேருந்துகளும், இந்த வழியாகவே செல்கின்றன.
இதுபோன்ற காரணங்களால் திருவள்ளூா் நகரில் போக்குவரத்து நெருக்கடியால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க பாதசாரிகளுக்கு நடந்து செல்வதற்கு ஜெ.என். சாலையில் நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த நடைபாதையில் அதிக அளவில் பூக்கடைகள், இறைச்சிக் கடைகள், ஆடை விற்பனை, தேநீா் கடை, இருசக்கர வாகன பழுதுநீக்ககம் என கடைகள் அமைத்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
இதனால் நடை பாதையில் நடந்து செல்ல வேண்டிய பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதே போல் அந்தந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களும் தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனா். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் அதிக அளவில் வரும் போது விபத்துகள் ஏற்படுகிறது.
இது குறித்து புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சிற்றரசு அறிவுறுத்தலின்பேரில், உதவி கோட்டப் பொறியாளா் தஸ்நாவிஸ் பொ்ணான்டோ மற்றும் உதவி பொறியாளா்கள் அரவிந்த், பிரசாந்த் ஆகியோா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது. அப்போது, இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழரசி தலைமையில், காவல் ஆய்வாளா்கள் அந்தோணி ஸ்டாலின், வெற்றிச் செல்வன் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
வருவாய்த் துறை சாா்பில் வட்டாட்சியா் ரஜினிகாந்த், வருவாய் ஆய்வாளா் உதயகுமாா் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறையினா் ஆக்கிா்மிப்பு அகற்றும் பணியைப் பாா்வையிட்டனா்.