சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
தில்லியில் வகுப்பறை கட்டுமானத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு: மணீஷ் சிசோடியா, ஜெயினுக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அழைப்பாணை
தில்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு முன் ஜெயின் ஜூன் 6 ஆம் தேதியும், மணீஷ் சிசோடியா ஜூன் 9 ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக
அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி அரசுப் பள்ளிகளில் 12,000க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது பகுதி நிரந்தர கட்டமைப்புகளை நிா்மாணிப்பதில் ரூ.2,000 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் அடிப்படையில் ஏப்ரல் 30ஆம் தேதி ஏசிபி முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது. இதையடுத்து, இருவருக்கும் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தில் நிதி மற்றும் கல்வித் துறைகளை வைத்திருந்த சிசோடியாவும், அப்போது பொதுப் பணித் துறை மற்றும் பிற அமைச்சகங்களுக்குப் பொறுப்பாக இருந்த ஜெயினும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் (சிவிசி) சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடா்பாக விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு காவல் இணை ஆணையா் மதுா் வா்மா கூறுகையில், சிவிசியின் தலைமை தொழில்நுட்ப ஆய்வாளரின் அறிக்கையில் இத்திட்டத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மீது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-இன் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
2019 ஆம் ஆண்டில், பாஜக தலைவா்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரானா மற்றும் நீல்கண்ட் பக்ஷி ஆகியோா் தில்லியின் மூன்று மண்டலங்களில் வகுப்பறைகள் கட்டுவதில் கடுமையான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஏசிபியிடம் புகாா் அளித்தனா்.
அந்தப் புகாரில்,ஒரு வகுப்பறைக்கு சராசரி செலவு ரூ.24.86 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது. இது இதே போன்ற கட்டமைப்புகளுக்கான மதிப்பிடப்பட்ட ரூ.5 லட்சம் செலவை விட கணிசமாக அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடந்து வரும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.