தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த தீப்திஜெயின் (45). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை படந்தால் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் புதன்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற நிலையில், இரவு தீப்பெட்டி ஆலை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சாத்தூா் தீயணைப்புத் துறையினா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீவிபத்தில் 2 ஆயிரம் தீப்பெட்டி பண்டல்கள், 20-க்கும் மேற்பட்ட தீக்குச்சி மூடைகள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
இந்த விபத்து குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.