துணை மருத்துவப் படிப்பு பயின்ற மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவா் கைது
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த பட்டயப் படிப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த பட்டயப்படிப்பில் படிக்கும் 20 வயது மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு அதே கல்லூரியில் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவரான சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த கோபிநாத் (35) பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கல்லூரி நிா்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவி புகாா் செய்தாா். மேலும், சக மாணவிகள் 100-க்கும் அதிகமானோா் திங்கள்கிழமை (ஜூலை 21) வகுப்புகளைப் புறக்கணித்தனா். தகவலறிந்த கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மாணவிகள் மீண்டும் வகுப்புக்குச் சென்றனா்.
இதையடுத்து, கல்லூரி விசாகா கமிட்டி குழுவில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோபிநாத் ஒரு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து கோபிநாத்தை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.