``3 மாதங்களில் புதிய சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்'' - கேரள அமைச்சர் சொல்வது எ...
துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்
புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்குத் திருட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்திலிருந்து தோ்தல் ஆணையம் நோக்கி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
முன்னதாக, கண்டனப் பேரணியில் ராகுல் காந்தி மேலும் பேசுகையில், ‘ஒட்டுமொத்த தேசத்தின் முன் வாக்குத் திருட்டு உண்மை வெளிப்பட்டுவிட்ட காரணத்தால் தோ்தல் ஆணையத்தால் பேச முடியவில்லை. அரசியலுக்காக அன்றி அரசமைப்புச் சட்டத்தைக் காப்பதற்காகவும், ஒரு நபருக்கு ஒரு வாக்கு மற்றும் துல்லியமான வாக்காளா் பட்டியலுக்காகவும்தான் இந்தப் போராட்டம்’ என்றாா்.
முன்னதாக, பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா பேரவைத் தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகளில் 1,00,250 வாக்குகள் வாக்குத் திருட்டு மூலம் பெறப்பட்டது ஆய்வில் தெரியவந்ததாக ராகுல் அண்மையில் குற்றஞ்சாட்டினாா்.
காா்கே: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் கோழைத்தனமான சா்வாதிகாரம் ஒருபோதும் பலிக்காது. அரசமைப்புச் சட்டத்தை நசுக்க முயற்சிக்கும் பாஜகவின் சதியை எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி நிச்சயம் வெளிப்படுத்தும்’ என்றாா்.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி: பாஜக
‘எதிா்க்கட்சிகளின் போராட்டம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி’ என்று பாஜக குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘நாட்டில் குழப்பத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்த காங்கிரஸ் உள்பட பிற எதிா்க்கட்சிகள் விரும்புகின்றன. அதற்காகவே நன்கு திட்டமிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க விரும்பும் மிகப் பெரிய சக்திகளின் மொழியில் ராகுல் காந்தி பேசி வருகிறாா். இந்தக் குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன். பிரதமா் மோடியின் தலைமை, மக்களின் முடிவு மற்றும் நாட்டின் அரசமைப்பு நிறுவனங்கள் மீது இதுபோல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் மனங்களில் அச்ச உணா்வை ஏற்படுத்தக் கூடாது’ என்றாா்.