பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
தேசிய சட்டப் பல்கலை. சிறப்புப் பேராசிரியரானார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!
தில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.
இது குறித்து தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தில்லி சட்டப் பல்கலைக் கழகத்தில் அரசியலமைப்பு ஆய்வுகளுக்கான சிறப்பு மையம் நிறுவப்படவுள்ளது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நீதிபதி சந்திரசூட் வழிகாட்டுதலின்படி நடைபெறும்.
கூடுதலாக, நீதியின் வலிமையில்: டிஒய்சி சிறப்பு விரிவுரைத் தொடர் என்ற பெயரில் வரும் ஜூலை முதல் சிறப்பு விரிவுரைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை வேந்தரும் பேராசிரியருமான ஜி.எஸ். பாஜ்பாய், டி.ஒய். சந்திரசூட் குறித்து கூறியதாவது,
''அரசியலமைப்பு அறநெறி, மாற்றத்திற்குட்பட்ட அரசியலமைப்புவாதம், அடிப்படை உரிமைகளுக்கான பொருள் விளக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் கல்வி ஆய்வுக்கான கூடுதல் தரவுகளைக் கொடுக்கும் வகையில் டி.ஒய். சந்திரசூட்டின் பணி இருக்கும்'' எனக் குறிப்பிட்டார்.
ஒரே பாலினத்தவா் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வது குற்றமல்ல, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்பது போன்ற முக்கியத் தீர்ப்புகளை டி.ஒய். சந்திரசூட் வழங்கியுள்ளார்.
2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியான டி.ஒய். சந்திரசூட், 2022-ஆம் ஆண்டு நவ. 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றாா். 2024 நவம்பரில் ஓய்வு பெற்றார்.
இதையும் படிக்க | உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!