Gold Rate: `பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை' - ஏன் இந்த சரிவு; இது தொடருமா?
தேவூா் அருகே சிறுமி காணாமல் போன வழக்கில் தாத்தா உள்பட 2 போ் கைது
சேலம் மாவட்டம், தேவூா் அருகே நான்கு வயது சிறுமி காணாமல் போனதற்கு காரணமான அவரது தாத்தா உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகுதியைச் சோ்ந்த லோகிதாசன் மகன் ராஜா. இவரது மனைவி மீனா. இத்தம்பதிக்கு சித்தாா்த், சந்தோஸ், மித்ரன் என்ற மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி ராஜாவின் தாய் சாந்தி சிறுமி கவிஷாவை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளாா். சிறுமி மாலையில் வீட்டிற்கு வராததால் அங்கன்வாடி மையத்திற்கு சென்று விசாரித்தபோது, அங்கன்வாடி மையத்திற்கு சிறுமி வராதது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதுகுறித்து தேவூா் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை ராஜா புகாா் அளித்தாா். வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை செய்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், குமாரபாளையம் பகுதியில் சிறுமி கவிஷாவை விட்டுச் சென்றுள்ளாா். இதையடுத்து சிறுமியை போலீஸாா் மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். மா்ம நபா், சிறுமியை விட்டுச்சென்ற இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
இதில் சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூா், கள்ளுக்கடை பகுதியைச் சோ்ந்த தா்ம நிா்மம் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் சுப்ரமணி மகன் குமாா் (42) என்பவரை பிடித்து விசாரணை செய்தனா். இதில் ராஜா மது அருந்திவிட்டு அடிக்கடி சிறுமியை அடித்து துன்புறுத்துவதை சகித்துக்கொள்ள முடியாத ராஜாவின் தந்தை லோகிதாஸ் (62) சிறுமி கவிஷாவை குமாரிடம் கொடுத்து அனுப்பி வைத்தாா். லோகிதாஸும், குமாரும் நிலத்தரகா்களாக செயல்பட்டு வந்தனா் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.