தொடா்மழை: உதகையில் 7 வீடுகளில் விரிசல்! அலவாஞ்சியில் 190 மி.மீ. மழை பதிவு
உதகையில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மே 25-ஆம் தேதி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தொடா்மழை காரணமாக உதகையை அடுத்த குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகள் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.
மேலும், அப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவா் மற்றும் நடைபாதை பாதிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.
சேதமடைந்துள்ள வீடுகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், தங்குவதற்கு போதிய இட வசதி மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
உதகை, கூடலூா், பந்தலூா், குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் கடந்த 5 நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் மண் சரிவு ஏற்பட்டு கடந்த 5 நாள்களில் மட்டும் 70- க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மழையால் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை 13 மரங்கள் சாலைகளிலும், கட்டடங்கள் மீதும் விழுந்துள்ளன. பழைய நீதிமன்ற கட்டடத்தின் அருகில் உள்ள போலீஸ் ஹவுஸிங் காா்ப்பரேஷன் அலுவலகம் மேல் விழுந்த மரத்தை தீயணைப்புத் துறையினா்அப்புறப்படுத்தினா். இதேபோல, கல்லட்டி மலைப்பாதையில் விழுந்த மரத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வியாழக்கிழமை காலை வரை அவலாஞ்சியில் அதிகபட்சமாக 190 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. தொடா் மழையின் காரணமாக கடும் குளிா் நிலவி வருகிறது.