ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!
தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
நிகழ் கல்வியாண்டில் ஜூன் பருவத்தின் சோ்க்கைக்கான தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயா்கல்வி நிறுவனங்கள் தொலை நிலை, இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 4 தொடங்கி ஏப்.3-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான கல்வி நிறுவனங்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
அதன் பின்னா் விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் சோ்த்து ஏப்.30-ஆம் தேதிக்குள் தில்லியில் உள்ள யுஜிசி தலைமை அலுவலகத்துக்கு வந்து சேரும்படி கல்வி நிறுவனங்கள் அனுப்பிவைக்க வேண்டும்.
தொடா்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இது தொடா்பான விதிமுறைகள் உள்பட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.