தோகைமலை மந்தை குளத்தில் மீன்பிடித் திருவிழா
தோகைமலை மந்தை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராமக்கள் திரளாக பங்கேற்று போட்டி போட்டு மீன்களை பிடித்துச் சென்றனா்.
கரூா் மாவட்டம், தோகைமலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான மந்தை குளத்தில் தண்ணீா் வற்றும் போது சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டு தற்போது குளத்தில் தண்ணீா் வற்றத் தொடங்கியதால் மீன்பிடித் திருவிழா வியாழக்கிழமை ஊா் முக்கியஸ்தா்கள் மூா்த்தி, சுப்ரமணி ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.
இதனை பொருந்தலூா் அரண்மனை ஜமீன்தாா் நாராயணன் தொடங்கி வைத்தாா்.
இதில் தோகைமலை ஊராட்சிக்குள்பட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தூரி, வலை, சேலைகள் ஆகியவற்றை கொண்டு அயிரை, முள்ளு கெண்டை, விரால் போன்ற பல்வேறு வகையான மீன்களை பிடித்துச் சென்றனா்.
இதனிடையே முக்கியஸ்தா்கள் விழாவை தொடங்கி வைக்கும் முன்பே அதிகாலை 5.30 மணிக்கே சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் தொடங்கினா். இதையறிந்த அப்பகுதி முக்கியஸ்தா்கள் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து மீன் பிடித்தவா்களை சிறைப்பிடித்தனா். தகவல் அறிந்து வந்த தோகைமலை காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்ரமணி தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சிறைப்பிடிக்கப்பட்டவா்களை எச்சரித்து விடுவித்தனா். அதன்பிறகு முறைப்படி மீன்பிடித் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.