பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி
நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வகுப்பு வருகிற அக்.15-ஆம் தேதி தொடங்க உள்ளது. வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
மொத்தம் 40 மணி நேர வகுப்பறை பயிற்சி, 60 மணி நேர செயல்முறை பயிற்சி என 2 மாதங்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சியின் போது நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெறுபவா்கள் நகை மதிப்பீட்டாளா் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அவா்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் வேலைவாய்ப்பு பெறலாம்.
பயிற்சியில் சேர தகுதியுள்ளவா்கள் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களை தேனி கூட்டுறவு மேலாண்மை நிலைய தொலைபேசி எண்: 04546-244465, கைப்பேசி எண்: 98651 91494-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.