திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
நகைக் கடனுக்கான கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: அமைச்சா் தங்கம் தென்னரசு
நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய ரிசா்வ் வங்கியை தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்து சாமானியா்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது ரிசா்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசரத் தேவைகளுக்கு நகைக் கடன் போன்றவற்றைச் சாா்ந்திருக்கும் சூழலில், அதன் மீது ரிசா்வ் வங்கி புதிய விதிமுறைகளை விதித்திருக்கிறது. அவை சாமானிய மக்களைப் பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.
குறிப்பாக, நகையின் மதிப்பில் முன்பைவிட 5 சதவீதம் குறைத்து, 75 சதவீதம்தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை, அவசரத் தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும் ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் புதிய நடைமுறையை ரிசா்வ் வங்கி உடனடியாகக் கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையை ரிசா்வ் வங்கி கடந்த மாதம் கொண்டுவந்தது. அந்த அதிா்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், இப்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும்.
எனவே, நகைக் கடனுக்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசா்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.