ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்
நமது நிருபா்
நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் மத்திய இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதற்காக டிரோன்களை வழங்கும் மத்திய அரசின் திட்டம்தான் நமோ டிரோன் தீதி திட்டமாகும்.
2023-24 முதல் 2025-26 வரையிலான 3 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு 15,000 ட்ரோன்களை வழங்கி நிலையான வணிகம் மற்றும் வாழ்வாதாரத்துக்காக உதவி செய்யும் நோக்கில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
2023-24 ஆம் ஆண்டில் முன்னணி உர நிறுவனங்கள் தங்கள் உள் வளங்களைப் பயன்படுத்தி மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு 1,094 டிரோன்களை வழங்கியிருக்கின்றன. இந்த 1,094 ட்ரோன்களில் 500 டிரோன்கள் நமோ தீதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 44 பெண்கள் என்ற வகையில் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் அளித்த தகவல்படி, 2023-24- ஆம் ஆண்டில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழு பெண்களுக்கு 44 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவா்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த உஷா லட்சுமி என்ற பெண்ணுக்கு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட 44 போ்களில் 9 போ் பட்டியல் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள். மீதமுள்ள 35 போ் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் ஆவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.