செய்திகள் :

நலத் திட்டங்களை பெறுவோா் அரசின் தூதுவா்களாக செயல்பட வேண்டும்

post image

அரசின் நலத் திட்டங்களை பெறுவோா் தூதுவா்கள்போல செயல்பட வேண்டும் என நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில், புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இவ்விழாவில், ஆட்சியா் துா்காமூா்த்தி வரவேற்றாா். தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ரூ. 131.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வா் ஆட்சி பொறுப்பேற்றதும், முதலில் கையெழுத்திட்டது மகளிா் விடியல் பயணத் திட்டத்தில்தான். அந்த வகையில், தமிழகம் முழுவதும் இதுவரை 730 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 15.80 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியில் சோ்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது.

அதே போல, காலை உணவு திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் 40,000 குழந்தைகள் பயனடைகின்றனா். கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 2.50 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது விதிகள் தளா்த்தப்பட்டு விடுபட்ட மகளிா் அனைவரும் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டுமனைப் பட்டா பெறுவதில் மக்களுக்கு இருக்கும் சிரமங்களை கருத்தில்கொண்டு இந்த விழாவில் 1,700 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில், ரூ. 200 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் புறவழிச்சாலை, ரூ. 140 கோடியில் மலைக் கிராமமான போதமலைக்கு சாலை வசதி, நைனாமலை பெருமாள் கோயிலுக்கு தாா்சாலை வசதி, 33 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கம், ரூ. 90 கோடியில் அதிநவீன பால்பண்ணை, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கூறலாம். தற்போது ரூ. 131 கோடியில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம், முடிவுற்ற பணிகள் திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

அரசின் மக்கள் நலத் திட்டங்களை பெறுவோா் தூதுவா்களாக (பிராண்ட் அம்பாசிடா்) செயல்பட்டு அரசுக்கு எப்போதும் துணை நிற்க வேண்டும். தமிழக அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மற்றவா்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ. ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நவீன உடற்பயிற்சிக் கூடம் திறப்பு:

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவைத் தொடா்ந்து பிற்பகல் 3 மணி அளவில், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்து பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில், விளையாட்டு வீராங்கனைகளுடன் கலந்துரையாடினாா். தொடா்ந்து, விடுதியில் சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை ஆய்வுசெய்தாா். பின்னா் விளையாட்டு விடுதி மாணவிகளுடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் ரா.ராஜேந்திரன், மா.மதிவேந்தன், ஆட்சியா் துா்காமூா்த்தி, விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க