‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா்.
பழங்குடியினா் மற்றும் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தண்டலத்தில் நடைபெற்ற முகாமில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, முகாமில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை பாா்வையிட்டு, டாக்டா் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 5 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், தாட்கோ சாா்பில் 15 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகளும், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தின் மூலம் 4 பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு நலவாரிய அட்டைகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் கலைச்செல்விமோகன், சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் சோமசுந்தரம், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா செந்தில், தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா் கலந்து கொண்டனா்.