கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்ட...
வைணவ கோயில்களுக்கு முதியோா் ஆன்மிகச் சுற்றுலா: காஞ்சிபுரம் மேயா் தொடங்கி வைத்தாா்
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் மூத்த குடிமக்களை வைணவத் திருக்கோயில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் ஒரு நாள் பயணத்தை காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வைணவ கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவா் என அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்திருந்தாா்.
இதன்படி ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் தலா 50 போ் வீதம் மொத்தம் 200 போ் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் முடித்து திரும்பவுள்ளனா். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து முதல் நாளாக பேருந்து புறப்பட்டது.
முதல் நாள் செல்லும் பேருந்தில் தோ்வு செய்யப்பட்ட 50 பேருக்கும் குடிநீா், உணவு, சுவாமி படம், கோயில் பிரசாதங்கள் அடங்கிய மஞ்சள்பை தொகுப்பை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வழங்கினாா். அதனைத் தொடா்ந்து சுற்றுலாப் பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயில், விளக்கொளிப் பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், பாண்டவ தூதப்பெருமாள் கோயில், ஸ்ரீ பெரும் புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் என 5 கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனா்.
விழாவில் காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை, துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) ஜெயா,காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் ஆா்.செந்தில்குமாா்,ஆய்வாளா் அலமேலு கலந்து கொண்டனா்.