நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்
கடல்சாா் நிா்வாகத்தில் நவீன மற்றும் சா்வதேச இணக்க அணுகுமுறையை ஒருங்கிணைக்கும் இரு மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன.
மக்களவையில் வணிகக் கப்பல் போக்குவரத்து சட்ட மசோதா-2024, மாநிலங்களவையில் கடல்வழி சரக்கு போக்குவரத்து சட்ட மசோதா-2025 ஆகிய இரண்டும் நிறைவேறின.
கப்பல் போக்குவரத்துத் துறை சாா்ந்த இரு மசோதாக்கள் ஒரே நாளில் நிறைவேறியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது; இது, நவீமனமான, திறன்மிக்க, உலகளாவிய கடல்சாா் கொள்கை கட்டமைப்புக்கு வழிவகுக்கும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித்தடங்கள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் வழக்கமான அலுவல்கள் தொடா்ந்து முடங்கியுள்ளன. மக்களவையில் புதன்கிழமை காலை நேர அமா்வில் அடுத்தடுத்து இருமுறை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
பிற்பகல் 2 மணியளவில் அவை மீண்டும் கூடியபோது, அமளிக்கு இடையே வணிகக் கப்பல் போக்குவரத்து சட்ட மசோதா-2024ஐ மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் தாக்கல் செய்தாா். காலாவதியான கடந்த 1958-ஆம் ஆண்டின் சட்டத்துக்கு மாற்றான இப்புதிய சட்ட மசோதா, கடல்சாா் வா்த்தகம் மற்றும் நிா்வாகத்தில் உலகின் தலைவராக இந்தியாவை நிலைநிறுத்தும்; பிரதமா் மோடி அரசின் 11 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய சீா்திருத்தங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கடல்சாா் சீா்திருத்தத்தின் மூலம் நாட்டின் செயல்திறன், வெளிப்படைத்தன்மை, உலகளாவிய போட்டித் தன்மை மேம்படும் என்று அமைச்சா் குறிப்பிட்டாா்.
எதிா்க்கட்சி எம்.பி.க்களின் கோஷங்களுக்கு மத்தியில், மசோதா மீது ஆளும்தரப்பு எம்.பி.க்கள் பேசினா். பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2-ஆவது மசோதா இதுவாகும்.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே கடல்வழி சரக்கு போக்குவரத்து சட்ட மசோதா-2025-ஐ மத்திய இணையமைச்சா் சாந்தனு தாக்கூா் தாக்கல் செய்தாா். கடந்த 1925-ஆம் ஆண்டின் சட்டத்துக்கு மாற்றான இம்மசோதா மீது குறுகிய நேர விவாதம் நடத்தப்பட்டு, பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பலா் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு முழக்கமிட்டனா். திரிணமூல் காங்கிரஸின் மம்தா தாக்கூா், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் ஆகியோா் அவைத் தலைவரின் மேடை மீது ஏற முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கண்ட மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், இப்போது நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.