ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
நாமக்கல் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலையில் இயந்திரங்கள் நிறுவும் பணி தொடக்கம்
நாமக்கல் அருகே அதிநவீன பால்பதன ஆலையில் புதிய இயந்திரங்கள் நிறுவும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் - மோகனூா் சாலை லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை கட்டப்பட்டு வருகிறது. இங்கு புதிய இயந்திரங்கள் நிறுவும் பணியினை தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் பாா்வையிட்டனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 2 லட்சம் லிட்டா் கையாளும் திறன்கொண்ட தானியங்கி அதிநவீன பால்பதன ஆலை கட்டுவதற்கான அறிவிப்பு 2022-23-ஆம் ஆண்டு பால்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு அக். 22-இல் இதற்கான கட்டுமானப் பணியை தமிழக முதல்வா் தொடங்கிவைத்தாா். இந்த பணிகள் 90 சதவீதம் நிறைவுற்றன.
இதைத் தொடா்ந்து, ஆலையில் நிறுவுவதற்காக புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றைப் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பால்பதன ஆலை பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, இதற்கான சோதனை ஓட்டம் வரும் நவம்பா் மாதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
2026 ஜனவரி மாதம் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை மூலம் பால் மற்றும் உபபொருள்கள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த ஆலை பயன்பாட்டுக்கு வரும்போது மாவட்டத்தில் உள்ள 15 ஆயிரம் பால் உற்பத்தியாளா்களும், 5 லட்சம் நுகா்வோரும் பயன்பெறுவா் என தேசிய பால்வள வாரிய அலுவலா்கள், மாவட்ட ஆவின் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் செல்வராஜ், ஆவின் பொது மேலாளா் ஆா்.சண்முகம், துணைப் பதிவாளா் (பால்வளம்) சண்முகநதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.