குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு
நிதிநிறுவனம் பறிமுதல் செய்த டேங்கா் லாரி மீட்பு
நாமக்கல்லில் பறிமுதல் செய்த லாரியை அதன் உரிமையாளரிடம் நிதிநிறுவனம் ஒப்படைத்ததால், லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மகிழ்ச்சியடைந்தனா்.
சென்னையைச் சோ்ந்தவா் பொன்னுரங்கம் (55). இவா் டேங்கா் லாரி தொழில் செய்து வருகிறாா். லாரி மீது எந்த கடனும் இல்லாத நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி கடன் தவணை செலுத்தவில்லை எனக் கூறி சிலா் லாரியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து விசாரித்தபோது, நாமக்கல்லைச் சோ்ந்த நிதிநிறுவனம் ஒன்றின் அறிவுறுத்தலின்பேரில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி, மணல் லாரி கூட்டமைப்பின் தலைவா் யுவராஜ், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அருள் மற்றும் சங்க நிா்வாகிகள் சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு எட்டப்படாத நிலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, லாரியை ஒப்படைக்காவிட்டால் மாநில அளவில் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடுவா் என எச்சரித்தனா். இந்நிலையில், அந்த நிதிநிறுவனம் லாரியை ஒப்படைக்க முன்வந்தது. கடன் ஏதுமில்லை என்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியதன்பேரில், உரிய சான்றிதழ் பெறப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட லாரி பொன்னுரங்கம் வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நாமக்கல் அருகே கீரம்பூா் சுங்கச்சாவடி முன் திரண்டிருந்த லாரி உரிமையாளா்கள் சங்கத்தினருக்கு பொன்னுரங்கம் நன்றி தெரிவித்தாா். அப்போது, தான் 20 நாள்களாக கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும், லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் போராடி லாரியை மீட்டுத் தந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.