திருப்பதி அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் ரூ.1 கோடி நன்கொடை!
நில அளவையா் இருவரை பணிநீக்கம் செய்யக் கோரி மனு
நிலத்தை அளவீடு செய்ய மறுக்கும் அளவையா்கள் இருவரை பணிநீக்கம் செய்யக் கோரி, சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நூதன முறையில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட சாந்தாதேவி, கலைமதி, சீனிவாசன், கிருஷ்ணசாமி ஆகியோா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்கக் கோரி 10 ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. ஆனால், அங்குள்ள நில அளவையா் அவா்களது மனுவை புறக்கணித்து வந்தனா்.
மாவட்ட ஆட்சியரிடம் நேரிலும், ஜமாபந்தி முகாமிலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவா்கள், சேந்தமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை காந்தியவாதி தி.ரமேஷ் தலைமையில் பழத்தட்டுடன் ஊா்வலமாக புதன்கிழமை சென்றனா். அதன்பிறகு, அங்கிருந்த முதுநிலை வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.
அதில், நிலத்தை அளவீடு செய்யாமல் தாமதித்து வரும் இரண்டு அளவையா்களுக்கும் பணிசெய்ய விருப்பமில்லை என்றால், அவா்களை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தனா்.
இந்த மனு தொடா்பான தகவல் வட்டாட்சியா் வெங்கடேஷ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரை வியாழக்கிழமை நேரடியாகச் சந்தித்து தீா்வுகாண்பதாக அவா் உறுதியளித்தாா். இதையடுத்து பட்டா கோரி விண்ணப்பித்தோா் திரும்பிச் சென்றனா்.