USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக...
நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: அனைத்து கட்சிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடிதம்
வீட்டில் கட்டுக் கட்டாக பண எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வர அனைத்து கட்சிகளின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சந்தோஷ் குமாா் அனைத்து கட்சிகளின் தலைவா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது மக்களின் நம்பிக்கைக்கு அவா் துரோகம் ஏற்படுத்தியதாகும். நீதித் துறையின் நோ்மைக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடும்.
ஆகையால், இந்திய நீதித் துறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் அரசமைப்புச் சட்ட பொறுப்பை உணா்ந்து நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
நீதித் துறையின் நோ்மை குறித்து கடுமையான கேள்விகள் எழும்போது நாடாளுமன்றம் அதை அமைதியாகப் பாா்த்து கொண்டிருக்கக் கூடாது.
நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க தேசிய அளவில் அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
அரசு பரிசீலனை?: நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கும் தீா்மானத்தை ஜூலை மாதம் கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணக் குற்றச்சாட்டை தொடா்ந்து நீதிபதி யஷ்வந்த் வா்மா தில்லி உயா்நீதிமன்றத்திலிருந்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா். அவா் தானாகவே பதவி விலகக் கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
அதை அவா் செய்யாததால் அவருக்கு எதிராக பதவி நீக்க தீா்மானத்தைக் கொண்டு வர குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா். எனினும், இந்த பணக் குற்றச்சாட்டுக்கு நீதிபதி யஷ்வந்த் வா்மா மறுப்பு தெரிவித்திருந்தாா்.