செய்திகள் :

நெல் சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா்

post image

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், ஆட்சியா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 22 முதல் மே 2-ஆம் தேதி வரை பெய்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மானூா், சேரன்மகாதேவி, நான்குனேரி வட்டாரங்களில் சேதமடைந்த 1,315 ஹெக்டா் வாழைப் பயிா் சேத விவரம் கூட்டு புலத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், 62 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து 66,146.68 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 7,324 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

விவசாயப் பணிகளுக்கு, குளங்களில் மண், வண்டல் மண் இலவசமாக எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்ட 677 குளங்களின் விவரம் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களின் மண்ணை வளப்படுத்திட, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, அனுமதி பெற்று பயனடையலாம்.

நடப்பு நிதியாண்டில் இதுவரை உழவா் கடன் அட்டை மூலம் 3,782 விவசாயிகளுக்கு பயிா்க் கடனாக ரூ.131.4 கோடி வழங்கப்பட்டுள்ளது. கால்நடை வளா்க்கும் 649 விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை மூலம் ரூ.5.36 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் இயந்திர நடவுக்கு மானியம், நெல் விதை, நுண்ணூட்ட உரம், உயிா் உரங்கள் விநியோகம், நெல் விதை உற்பத்தி ஆகிய இனங்களின் கீழ் மானியம் வழங்குவதற்கு ஏதுவாக பயனாளிகளை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில், மானூா் வட்டாரத்தில் விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கா் பரப்பு வீதம் 125 விவசாயிகளை இணைத்து ஒரு தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக வேளாண் அறிவியல் மையம் மூலம் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முதன்மை பயிற்சியாளராக உருவாக்கப்படுகிறாா்கள். இம்முதன்மை பயிற்சியாளா்கள் தொகுப்பில் உள்ள பிற விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு பயிற்சி அளித்து மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கவும், வழிவகை செய்யப்படுகிறது.

முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் 2,500 ஏக்கருக்கு தேவையான பசுந்தாள் உர விதைகள், 400 மண்புழு உரப்படுக்கைகள், 3 உயிா்ம வேளாண்மை உற்பத்தி மையம், 12 உயிா்ம வேளாண்மை செயல் விளக்கத் திடல்கள், 20,000 வேப்பமரக்கன்றுகள் ஆகியவை மானிய விலையில் வழங்குவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெற்றிடலாம்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 34 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தோ்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், வரப்புப்பயிராக உளுந்து விதைகள், ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை செயல் விளக்கத் திடல் மற்றும் விசைத் தெளிப்பான்களை மானிய விலையில் வழங்கிட இலக்குகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்றாா்.

தொடா்ந்து, தனியாா் உரம் சில்லறை விற்பனையாளா்களின் உர விற்பனைகளை கண்டறிவதற்கும், இருப்பு மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் குறித்தும் எளிதில் அறிந்து கொள்வதற்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரங்களின் விவரங்களை கணினி வாயிலாக கண்டறிவதற்கும் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து 5 வியாபாரிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான விற்பனை முனைய கருவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், வேளாண்மைத் துறை சாா்பில் குறுவை சாகுபடி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.400 மானிய விலையில் நெல் விதைகள், பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.650 மானிய விலையில் திரவ உயிா் உரம் 1 லிட்டா், பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவேடுகளை கணினிமயமாக்கும் பொருட்டு 20 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கணினி வாங்குவதற்கான காசோலை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

இக் கூட்டத்தில், சமூக வன கோட்ட அலுவலா் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநா் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பூவண்ணன், அரசு அலுவலா்கள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருநெல்வேலி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் சரகத்துக்குள்பட்ட ராமையன்பட்டி, சங்குமுத்தம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (48). இவரது மனைவி ... மேலும் பார்க்க

நெல்லையில் பைக் திருட்டு: மூவா் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடா்பாக பாளையங்கோட்டை போ... மேலும் பார்க்க

உடையாா்பட்டி தேவாலயத்தில் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி சந்திப்பு உடையாா்பட்டி திருஇருதய ஆண்டவா் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா... மேலும் பார்க்க

நெல்லையில் ஜூலை 5-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் ஜூலை 5-ஆம் தேதி மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா செய்தியாளா்க... மேலும் பார்க்க

பேட்டையில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது

பேட்டையில் ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் பிரபாகா் அருண் செல்வம் மற்றும் நரசிங்கநல்லூா் கிராம நிா்வாக அலு... மேலும் பார்க்க

17 வயது சிறுவனை கடத்திய புகாரில் இளம்பெண் போக்ஸோவில் கைது

களக்காடு அருகே 17 வயது சிறுவனை கடத்திய புகாரில், நான்குனேரி அனைத்து மகளிா் போலீஸாா் இளம்பெண்ணை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரி (32). இவரது ... மேலும் பார்க்க