நைனாமலை பெருமாள் கோயிலுக்கான சாலை பணி ஆய்வு
நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்வதற்கான சாலை பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மற்றும் ராசிபுரம் ஒன்றியப் பகுதிகளில் தமிழக அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். குறிப்பாக, பிரசித்தி பெற்ற நைனாமலை பெருமாள் கோயிலுக்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தாா். தாா்சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
இதனைத் தொடா்ந்து, நைனாமலை அடிவார பகுதியில் உள்ள கடைகளில் நெகிழி பயன்பாடு இருப்பதை பாா்வையிட்டு அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத துணிப் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடை உரிமையாளா்களிடம் அறிவுறுத்தினாா்.
அதன்பிறகு, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், அங்கு கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெறுவதை பாா்வையிட்டாா். தொடா்ந்து, ராசிபுரம் ஒன்றியம் பொன்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிராம நிா்வாக அலுவலகத்தையும், 85.ஆா்.குமாரபாளையம் பகுதியில் எரிவாயு மையம் அமையவுள்ள இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்ட பொறியாளா் கே.ஆா்.திருகுணா, உதவி கோட்ட பொறியாளா் ஆா்.சுரேஷ்குமாா், உதவி பொறியாளா் அ.க.பிரனேஷ், அதிகாரிகள் உடனிருந்தனா்.