பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவு!
மும்பை: சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவிகிதமாகக் குறைந்ததால், இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தன.
தனிந்து வரும் பதற்றம், அமெரிக்காவில் ஏப்ரல் மாத பணவீக்கத் தரவு மற்றும் உலகளாவிய வர்த்தக பதட்டங்கள் இடைநிறுத்துதல் ஆகியவற்றால் பங்குச் சந்தை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில், 30-பங்கு கொண்ட மும்பை பங்குச் சந்தையின் அளவுகோல் அளவான சென்செக்ஸ் 182.34 புள்ளிகள் உயர்ந்து 81,330.56 புள்ளிகளாகவும், நிஃப்டி 88.55 புள்ளிகள் உயர்ந்து 24,666.90 புள்ளிகளாக நிலைபெற்றது. அதே வேளையில் சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 81,691.87 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 80,910.03 புள்ளிகளை தொட்டது.
சென்செக்ஸில் டாடா ஸ்டீல், எடர்னல், டெக் மஹிந்திரா, மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் ஏஷியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி மற்றும் பவர் கிரிட் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.
நிஃப்டி-யில் டாடா ஸ்டீல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், எடர்னல் ஆகியவை உயர்ந்தும் ஏஷியன் பெயிண்ட்ஸ், சிப்லா, டாடா மோட்டார்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.6 சதவிகிதம் உயர்ந்தன.
வங்கி தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளுமான ரியல் எஸ்டேட், எண்ணெய் & எரிவாயு, தொலைத்தொடர்பு, ஊடகம், ஐடி மற்றும் உலோக குறியீடுகள் 1 முதல் 2.5 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.
மார்ச் 2025 காலாண்டில் பாரதி ஏர்டெல் லிமிடெட் நிகர லாபம் 1 சதவிகிதம் உயர்ந்து அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.11,022 கோடியாக உயர்ந்தது. இதற்கு கட்டண உயர்வு மற்றும் ஒரு முறை அரசு வழங்கிய வரிச் சலுகையாகும்.
மார்ச் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் சரிந்து ரூ.8,556 கோடியாக இருந்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் 1 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தன.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்தும், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு சரிந்து முடிந்தன.
ஐரோப்பிய குறியீடுகள் 0.5 சதவிகிதம் சரிவுடன் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.13 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 65.88 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.476.86 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆதம் இன்வெஸ்ட்மென்ட், ஹிட்டாச்சி எனர்ஜி, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், மேக்ஸ் ஃபைனான்சியல், சியட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், மசகான் டாக், டால்மியா பாரத், ஜே. கே. சிமென்ட், சிட்டி யூனியன் வங்கி, பாரத் டைனமிக்ஸ், ஏபிஎல் அப்பல்லோ, சோலார் இண்டஸ்ட்ரீஸ், காட்ஃப்ரே பிலிப்ஸ், பாரதி ஹெக்ஸாகாம் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 52 வார உயர்வை பதிவு செய்தது.
இதையும் படிக்க: எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,600 கோடியாகச் சரிவு!