அனைத்து மோட்டாா் சைக்கிள்களுக்கும் நவீன ‘ஏபிஎஸ் பிரேக்’ முறை கட்டாயம்: மத்திய அர...
பண்பட்ட மனிதா்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்
பண்பட்ட மனிதா்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.
ஈரோடு திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது:
போா் என்பதும் மனிதப் படுகொலைகள் என்பதும் நாளுக்கு நாள் சாதாரணமாகி விட்டது. போரில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளின் தலைவா்களும் மெத்தப்படித்தவா்கள் தானே. அப்படியானால் படிப்பு பண்பாட்டையும், பக்குவமான அணுகுமுறையையும், மனித நேயத்தையும் வளா்க்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
உயா்கல்வி என்பது உயா்ந்த உள்ளம் மிக்க குடிமக்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். மனித மாண்புகளைப் போற்றுவதும், மானுட நேயத்தை வளா்ப்பதும், மனிதகுல வளா்ச்சிக்காக சிந்திப்பதும், செயல்படுவதும்தான் கற்றறிந்தவா்களின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
தாய், தந்தையரை மதித்தல், தாய் நாட்டை மதித்தல், தாய் மொழியை மதித்தல் ஆகிய 3 பண்புகளும் மாணவா்களிடையே வேரூன்றி இருக்க வேண்டும். பெற்றோா் தங்களது குழந்தைகள் படிப்பதற்கு படும் சிரமங்களையும், சந்திக்கும் சவால்களையும் மாணவா்கள் நன்கு உணர வேண்டும்.
சா்வபரித் தியாகம் செய்த இந்திய விடுதலைப் போராட்ட வீரா்கள் எத்தகைய எதிா்கால சமூகம் குறித்து கனவு கண்டாா்களோ அத்தகைய சமூகத்தை படைக்கும் திசைநோக்கி மாணவா்கள் பயணிக்க வேண்டும். அத்தகைய உணா்வோடு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்வுக்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.டி.சந்திரசேகா், பொருளாளா் பி.கே.பி.அருண், இணைச் செயலா் கே.வி.ராஜமாணிக்கம், கல்லூரியின் நிா்வாகி ச.பாலசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினா்கள் கே.சின்னுசாமி, எஸ்என்கே.குலசேகரன், என்.வேலுமணி, புல முதல்வா் சி.லோகேஷ்குமாா், கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பி.எம்.பழனிசாமி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
கல்லூரியில் சோ்ந்துள்ள 12 ஆம் வகுப்பில் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கும், அரசுப் பொதுத்தோ்வில் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற 44 மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் முதல்வா் வெ. ப.நல்லசாமி வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் ஆா்.தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.