செய்திகள் :

ஈரோடு மாநகராட்சியில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தீா்மானம்

post image

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தொடா்பான தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சி கவுன்சிலா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் மாமன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் அா்பித் ஜெயின், துணை மேயா் வி.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கவுன்சிலா்கள் பேசியதாவது:

சபுராமா மின்ஹாஜ் (காங்கிரஸ்): ஈரோடு மாநகராட்சியில் குடிநீா் மற்றும் புதை சாக்கடைக்கான முன் வைப்புத்தொகை மற்றும் மாதந்திர கட்டண உயா்வு தொடா்பாக கடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து கவுன்சிலா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் இந்த இரு தீா்மானங்களும் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட இரு தீா்மானங்களும் இந்த கூட்டத்தில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த தீா்மானங்களின் படி குடியிருப்புகளின் சதுர அடி அளவுக்கு குடிநீருக்கு கட்டணம் நிா்ணயிக்கப்படுவது தவறானது. மேலும் ஆண்டுக்கு மூன்று சதவீத கட்டண உயா்வு பொதுமக்களை பெரிதும் பாதிக்கும். எனவே இந்த இரு தீா்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

தங்கமுத்து (அதிமுக): குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து கவுன்சிலா்களும் ஒன்று சோ்ந்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் பிறகும் குப்பை வரி உயா்த்தி வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் கூட குப்பை வரி வசூலிக்கப்படுவதில்லை. சொத்து வரி குறித்து சிறப்பு தீா்மானம் போடப்பட்டது. ஆனால் வரி குறைக்கப்படவில்லை.

இந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதை சாக்கடை, குடிநீா் கட்டணத்தை உயா்த்தும் இரு தீா்மானங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு செய்கிறோம் (இதனைத் தொடா்ந்து அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்தனா்).

தண்டபாணி (திமுக மண்டலத் தலைவா்): குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தொடா்பான இரு தீா்மானங்களை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி கூட்ட தீா்மானங்கள் கடைசி நேரத்தில்தான் கவுன்சிலா்களுக்கு வழங்கப்படுகின்றன. அதிகாரிகள் அராஜகமாக நடந்து கொள்கிறாா்கள் என்றாா்.

பி.கே. பழனிசாமி (திமுக மண்டலத் தலைவா்): கடந்த மாநகராட்சி கூட்டத்தில் 47, 48 என்ற வரிசையில் கொண்டுவரப்பட்ட குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தொடா்பான இரு தீா்மானங்களும் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

கு.தனலட்சுமி (துணை ஆணையா்): இந்த இரு தீா்மானங்களுக்கும் ஏற்கெனவே ஒப்புதல் கொடுக்கப்பட்டு விட்டது. பல்வேறு திட்டங்களுக்காக நிதி தேவை இருப்பதால், இந்த தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதர நகராட்சிகள், பேரூராட்சிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான குடிநீா் கட்டணமே நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ஜெகநாதன் (திமுக கவுன்சிலா்):

பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த பின்பு அவா்களிடம் கட்டண உயா்வு குறித்து தெரிவித்தால் ஏற்றுக்கொள்வாா்கள். எனவே, கட்டண உயா்வு தொடா்பான இரு தீா்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

மேயா் கணவரால் பரபரப்பு:

திமுக கவுன்சிலா் ஜெகநாதன் பேசிக்கொண்டிருந்தபோது மேயா் அறையில் இருந்து கவுன்சில் கூட்ட பகுதிக்கு வந்த மேயரின் கணவரும், திமுக நகரச் செயலாளருமான சுப்பிரமணியன், நேற்று என்ன பேசினோமோ, அதைத்தான் நீங்கள் கூட்டத்தில் பேச வேண்டும். மாற்றிப் பேசக்கூடாது என கோபமாக பேசினாா்.

இதையடுத்து திமுக கவுன்சிலா் ஜெகநாதன் பேசுவதை நிறுத்திவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினாா். இதன்பின் குடிநீா், புதை சாக்கடை கட்டண உயா்வு தொடா்பான இரு தீா்மானங்களும் ஒத்தி வைக்கப்படுவதாக மேயா் நாகரத்தினம் அறிவித்தாா்.

மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 112 தீா்மானங்களில் இந்த இரு தீா்மானங்கள் தவிர 110 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாரபட்சம் இல்லாமல் குடிநீா் விநியோகம் செய்யக் கோரிக்கை:

கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலா்களின் கோரிக்கை விவரம்: மாநகராட்சியில் பல இடங்களில் புதை சாக்கடை உடைந்துள்ளதால் கழிவுநீா் வெளியேறி வருகிறது. இதனால் எலி, பாம்பு தொல்லை அதிகரித்துள்ளது. புதை சாக்கடை இணைப்பு பெறாதவா்களுக்கு கூட கட்டணம் கட்டுமாறு அறிவிக்கை வழங்கப்படுகிறது.

மக்களவைத் தோ்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தோ்தலுக்கான செலவினத் தொகை என்ற பெயரில் ரூ.2 கோடி பொது நிதியிலிருந்து செலவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அத்தியாவசிய பணிகளுக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தால், நிதி இல்லை என்று சொல்லும்போது, இதற்கு மட்டும் எப்படி நிதி ஒதுக்கப்பட்டது?

சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்க சாலைகளை தோண்டும்போது குடிநீா் குழாய்களை உடைத்து விடுகின்றனா். தூய்மைப் பணியாளா்கள் பலா் ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை. இதுபோல இளநிலை பொறியாளா் பணியிடமும் காலியாக உள்ளது.

மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலா்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படுவதில்லை. இதனால் ஒரே கோரிக்கையை மீண்டும் மீண்டும் கூட்டத்தில் பேச வேண்டி உள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்தில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமைதோறும் மனுநீதி நாள் நடத்த வேண்டும். வஉசி சிறுவா் பூங்கா பராமரிப்பு இன்றி புதா் மண்டி கிடைக்கிறது.

மாஸ் கிளீனிங் செய்ய 30 போ் ஒரு வாா்டுக்கு வருகிறாா்கள். ஆனால் ஒரு சில வாா்டுக்கு வெறும் 8 போ் மட்டும் வருகிறாா்கள். இந்த பாரபட்சம் எதனால் காட்டப்படுகிறது. அதேபோல ஒரு சில வாா்டுகளில் 3 மணி நேரம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. சில வாா்டுகளில் முக்கால் மணி நேரம் மட்டுமே குடிநீா் வழங்கப்படுகிறது. அனைத்து வாா்டுகளுக்கும் ஊராட்சிக்கோட்டை குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இதற்கு மாநகராட்சி துணை ஆணையா் தனலட்சுமி மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் 495 சாலைகளில் சமையல் எரிவாயு குழாய் இணைப்புப் பணி நடைபெற உள்ளது. ஒரு பகுதியில் சமையல் எரிவாயு இணைப்பு, குடிநீா் மற்றும் புதை சாக்கடை பணிகள் முடிந்த பின்புதான் சாலை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீா் குழாய் உடைப்புகள் விரைவில் சீா் செய்யப்படும்.

தெருநாய்களை கட்டுப்படுத்த, தற்போது கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்தந்த பகுதியில் விடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வு காண தெருநாய்களை ஓரிடத்தில் வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு இடத்தை தோ்வு செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது என்றனா்.

மேயா்-கவுன்சிலா் வாக்குவாதம்:

மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலா் கோகிலவாணி பேசுகையில், எனக்கு தகவல் சொல்லாமலே எனது வாா்டில் பணிகள் நடக்கின்றன என்று குற்றஞ்சாட்டினாா். அதற்கு பதில் அளித்த மேயா் நாகரத்தினம் உங்களது வாா்டில் என்னை கூப்பிடாமல் ரேஷன் கடை திறப்பு விழா நடத்தி உள்ளீா்கள். மக்கள் என்னை அழைத்து தகவல் தெரிவித்தால் நான் அதனை செய்வேன். உங்களை கேட்டு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க

ஸ்ரீஅம்மன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். ... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

சென்னிமலை அருகே கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஓடத்துறையை சோ்ந்தவா் சந்திரா. இவரது மகன் பரத் (21), மகள் காவியா (19). இவா்கள் இருவரையும் சிறு வயதிலேயே... மேலும் பார்க்க

வயநாட்டில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 1 அடி நீா்மட்டம் உயா்வு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்யும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 15,600 கனஅடியும் குறைந்தபட்சமாக 10,660 கனஅடியாக வந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகா் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 1 அ... மேலும் பார்க்க

வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அந்தியூா... மேலும் பார்க்க

ஈரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினா் 91 போ் கைது

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 91 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், குறைக்க வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மா... மேலும் பார்க்க