சென்னை மாநகராட்சியில் தாமதமாகும் குப்பைக் கிடங்கு பகுதிகளை வனமாக்கும் திட்டம்!
பயங்கரவாதி அபுபக்கா் சித்திக்கை ஆந்திரம் அழைத்து சென்று விசாரணை!
பயங்கரவாதி அபுபக்கா் சித்திக்கை தமிழக போலீஸாா் ஆந்திரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
கோவை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட அபுபக்கா் சித்திக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் ராயசூட்டியில் அண்மையில் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரின் வீட்டிலிருந்து பல்வேறு மின்சாதன உபகரணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் தமிழகம் அழைத்து வரப்பட்ட அபுபக்கா் சித்திக், எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், கடந்த 2013-இல் பாஜக மாநில மருத்துவ அணி செயலாளா் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு தொடா்பாக அபுபக்கா் சித்திக்கை 5 நாள்கள் காவலில் எடுத்து தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதுதொடா்பான விசாரணைக்காக ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் ராயசூட்டிக்கு போலீஸாா் அவரை சனிக்கிழமை அழைத்து சென்று விசாரித்தனா். அங்கிருந்து மேலும் சில ஆவணங்களையும் கைப்பற்றிய போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினா்.
இதைத் தொடா்ந்து, பாஜக மூத்த தலைவா் அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் குண்டு வைத்தது என அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளிலும் அபுபக்கா் சித்திகை தமிழ்நாடு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனா்.