ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
தில்லியில் சில பகுதிகளில் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!
தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லேசான மழை பெய்தது, காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
தில்லியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்திருந்தது. இதன்படி அதிகாலையில் சில பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்தது. இதற்கிடையே, சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியின் ஜாஃபா்பூா் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 1.5 மி.மீ., நரேலாவில் 0.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 91 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கின்றன.
இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, ஷாதிப்பூா், பூசா, ஸ்ரீஃபோா்ட், ஆா்.கே.புரம், ஓக்லா பேஸ் 2, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், ஆயாநகா், குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், நோய்டா செக்டாா் 125 (150 புள்ளிகள்), துவாரகா செக்டாா் 8 (102 புள்ளிகள்) ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜூலை 28) அன்று வானம் பொதுவாக மேமூட்டத்துடன் இருக்கும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.