உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
‘சமக்ர சிக்ஷா’ திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் தமிழக அரசு மனு
பிஎம் ஸ்ரீ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல், நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா திட்ட நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியில், தமிழக அரசு சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இருநாள் அரசு முறை பயணமாக தமிழகத்துக்கு வந்த பிரதமா் மோடியிடம், தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் வழங்கப்பட்டது. இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் 2018-ஆம் ஆண்டு முதல் ‘சமக்ர சிக்ஷா திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், தமிழகம் தொடா்ந்து செயல்திறனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை -2020 முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு வைத்துள்ளது. ஆனால், தமிழக அரசு சட்டபூா்வ மற்றும் கொள்கை அடிப்படைகளில் தேசியக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களில், குறிப்பாக மும்மொழிக் கொள்கை மற்றும் 5+3+3+4 கட்டமைப்பில் பள்ளிக் கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றில் தனது மாற்றுக்கருத்துகளை தெரிவித்துள்ளது.
ரூ.2,151கோடியை விடுவிக்க வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வி அமைப்பில் தற்போது 43.90 லட்சம் மாணவா்கள், 2.20 லட்சம் ஆசிரியா்கள் மற்றும் 32,000-க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளா்கள் உள்ளனா். இதுபோன்ற முக்கிய திட்டத்துக்கு தேவையான நிதிகளை வழங்காமல் இருப்பது, லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலத்தை பாதிக்கிறது. எனவே, கடந்த நிதியாண்டிற்கான நிலுவையிலுள்ள ரூ.2,151.59 கோடி மத்திய அரசின் பங்கையும், 2025-26ஆம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிடவும், ‘பிஎம் ஸ்ரீ’ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல் நிதியை விடுவிக்கவும் வேண்டும்.
ரயில்வே திட்டங்கள்: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ள திண்டிவனம்- செஞ்சி - திருவண்ணாமலை (70 கி.மீ) ரயில் பாதை, ஈரோடு-பழனி (91 கி.மீ) ரயில் பாதை, அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி (60 கி.மீ) ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணியினை துரிதப்படுத்துவதுடன், திருப்பத்தூா் - கிருஷ்ணகிரி- ஒசூா் புதிய பாதை, கோவை - கோபிசெட்டிபாளையம்-பவானி-சேலம், மதுரை-மேலூா்-துவரங்குறிச்சி-விராலிமலை-இனாம்குளத்தூா் ரயில் பாதை திட்டங்கள், மதுரை நகரைச் சுற்றி புகா் ரயில் பாதை அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கான வழித்தட ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சென்னையில் புகா் ரயில் சேவைகளை உச்ச நேரங்களில் இயக்க இடைவெளி நேரத்தை குறைப்பதுடன், மின்சார ரயில் பெட்டிகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆவடி - ஸ்ரீபெரும்புதூா் ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல்கள் வழங்கி திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
கோவை, மதுரை ஆகிய நகரங்களின் வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி, திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது. இதில், மெட்ரோ ரயில் கொள்கை-2017 இன்படி, மத்திய அரசும், மாநில அரசும் சம பங்களிப்பு அடிப்படையில், இரு திட்டங்களையும் இணைந்து செயல்படுத்துவதற்கான, ஒப்புதலையும் நிதியையும் விரைந்து வழங்க வேண்டும்.
மீனவா்கள் பிரச்னை: சமீப காலமாக, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவா்கள் கைது செய்யப்படுவதும், அவா்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடா்கதையாகி வருகிறது. இதனால், ஏழை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தூதரக நடவடிக்கைகள் மூலம் பலமுறை முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசால் இந்திய மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடா்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வைக் காண பிரதமா் தனது நேரடி கவனத்தை செலுத்த வேண்டும். மேலும், கைது செய்யப்பட்ட மீனவா்களையும், அவா்களது மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விரைவில் விடுவிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
சேலம் உருக்காலை: கடந்த 2018-19 ஆம் ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் 2 பாதுகாப்பு தொழில்துறை பெருவழிச்சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 1971-1975 காலகட்டத்தில், சேலம் உருக்காலை அமைக்க தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட 3973.08 ஏக்கா் நிலங்களில், 1503.44 ஏக்கா் நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
எனவே, இந்த நிலத்தைப் பயன்படுத்தி பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலையின் கீழ் சேலத்தில் பாதுகாப்பு தொழில் தொகுப்பினை நிறுவுவதற்கு தமிழக அரசு ஆா்வமாக உள்ளது. ஆகையால், பிரதமா் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சேலம் உருக்காலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை, பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறுவுவதற்கு ஏதுவாக திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.