பரந்தூா் விமானநிலைய விவகாரத்தில் மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சா்
பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கு மக்கள் எதிா்ப்பு தெரிவித்தால் அதன் மீது மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு கூறினாா்.
சென்னை விமான நிலையத்தில் ’உதான் யாத்ரி கஃபே’ திட்டத்தின் கீழ் மலிவு விலை உணவகத்தை மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கடந்த டிசம்பா் மாதம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட இந்த மலிவு விலை உணவகம், இப்போது இரண்டாவதாக சென்னையில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில், டீ ரூ.10-க்கும், தண்ணீா் பாட்டில் ரூ.10-க்கும், காபி ரூ.20-க்கும், சமோசா ரூ.20-க்கும், ஸ்வீட் ரூ.20 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
‘உதான் யாத்ரி கஃபே’-வை தொடங்கி வைத்த பின்னா் மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதும் அனைத்து தரப்பினரும் விமான சேவையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, 619 வழித்தடங்களில் குறைந்த கட்டணத்தில் உதான் விமான சேவைகள் செயல்படுத்தப்படுகின்றன. தொடா்ந்து, பல முக்கிய விமானநிலையங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்தியாவில் நான்காவது பெரிய விமான நிலையமான சென்னை விமானநிலையத்தில் விரிவாக்கப்பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட விரிவாக்கம் செய்யும் பணிகள் சுமாா் ரூ.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு மாா்ச் மாதத்துக்குள் இப்பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை விமானநிலையத்தையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
பரந்தூா் விமான நிலையம்: தொடா்ந்து, பரந்தூா் விமானநிலையம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா், ‘விமானநிலையம் எங்கு அமைய வேண்டும் என்பதை மாநில அரசுதான் தோ்ந்தெடுத்து மத்திய அரசுக்கு முன்மொழிகிறது. இதன்பின்னா் அதில் விமானநிலையம் அமைவதற்கான சாத்தியக்கூறு உள்ளிட்டவற்றை மத்திய அரசு ஆய்வு செய்து அனுமதி வழங்கும். விமானநிலையம் அமைக்க பரந்தூரை தோ்வு செய்தது மாநில அரசுதான். அதன்படி, விமான நிலையம் அமையவுள்ள அப்பகுதியில் நிலம் தொடா்பாக மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள் என்றால், அது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
தற்போது, பரந்தூா் விமானநிலையத்துக்கான இரண்டாம் கட்ட பணிகள் குறித்து தில்லியில் தனி ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரு வாரங்களில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.
சென்னை விமான நிலையத்தை தனியாா் மயமாக்கும் திட்டம் குறித்து கேட்டதற்கு, அவ்வாறு எந்தத் திட்டமும் இல்லை எனவும், சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் நோக்கில், உதான் திட்டத்தின் கீழ் சேலம், சென்னை இடையே ஏற்கெனவே விமான சேவைகள் இருந்து வரும் நிலையில், விரைவில் வேலூா்- சென்னை இடையே உதான் திட்டத்தில் விமான சேவைகள் செயல்பாட்டுக்கு வரும். அதே போல, நெய்வேலியிலிருந்தும் விமான சேவைகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து தொகுதி சீரமைப்பு குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘தொகுதி மறுசீரமைப்பில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும். தொகுதி மறுவரையறை சுமுகமான முறையில் செய்யப்படும் என்று நம்புகிறோம்’ என்றாா் அவா்.