``பல தலைமுறைகளாக இந்த பந்தம்..." -புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்த இஸ்லாமியர்கள்!
தஞ்சாவூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. புன்னை மரக்காட்டில் மூலஸ்தான மகமாயியான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானதாக ஐதீகம். இதனால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைல காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறுவது வழக்கம். இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோவில்களில் ஒன்றாகும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/3n915qv3/15951eec-c3bd-42a6-b77e-eee5485151e0.jpg)
இதன் குடமுழுக்கு கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு, குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு, அரண்மனை தேஸ்வதானம், அறநிலையத்துறை சார்பில், கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 10-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குடமுழுக்கிற்கான பூஜைகள் மற்றும் யாக சாலை பூஜைகள் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்றன. இதையடுத்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமர்சையாக குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் போது, `எங்களுக்கு எல்லாத்தையும் தரும் மகமாயி' என பக்தர்கள் கோஷமிட்டனர்.
குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பூஜைக்கு தேவையான பழங்கள், நெய், புடவை, ஜாக்கெட் பிட் உள்ளிட்ட பல பொருள்களை 51 தட்டில் இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தது முத்தாய்ப்பாகவும், மதநல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாகவும் அமைந்தது. அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், நாங்களும், இஸ்லாமியர்களும் மதங்களை கடந்து உறவுகளாக, சகோதர்களாக நகமும், சதையுமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/gc1i2vun/1622c8cd_c335_4437_85a1_82ca7bac99da.jpg)
இது குறித்து மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, "மாரியம்மன் கோயில் பகுதியில் சுமார் 200 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள இந்துக்களும், நாங்களும் தாயா, பிள்ளையா வாழ்ந்து வருகிறோம். கோயிலில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கும். பூச்சொரிதல் விழா நடக்கும் போதும் இதே போல் சீர் வரிசை எடுத்துச் செல்வோம். தற்போது குடமுழுக்கு விழாவிற்காக 51 தட்டுகளில் சீர்வரிசை பொருள்கள் எடுத்துச் சென்றோம். பல தலைமுறைகளாக இந்த பந்தம் தொடர்கிறது" என்றார்.