மதக் கலவரத்தை தூண்டும் முகநூல் பதிவு: விஹெச்பி நிா்வாகி கைது
பலூச் ஆர்வலர்களின் போராட்டத்தில் பாக். படையினர் துப்பாக்கிச் சூடு?
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானில் பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டு மாயமாக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் எனும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தோர் லாஸ்பெலா பகுதியில் முகாமிட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 23) அதிகாலை அவர்களது முகாமினுள் நுழைந்த பாகிஸ்தான் காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் அவர்களது கூடாரங்களை அகற்றி அங்கு திரண்டிருந்த மக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியும் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உக்ரைன்: ரஷிய டிரோன்களின் தாக்குதலில் குழந்தை உள்பட 3 பேர் பலி!
முன்னதாக, நேற்று (மார்ச் 22) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பலூச் யாக்ஜெஹ்தி ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளரான மஹ்ராங் பலூச் என்பவரை பாகிஸ்தான் படைகள் கைது செய்தனர்.
பாகிஸ்தான் முழுவதும் மனித உரிமை அமைப்புகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலூச்சிற்கு ஆதரவாக திரண்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்தி நீதி தேடுபவர்கள் துன்புறுத்துப்படுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இத்துடன், கைது செய்யப்பட்ட மஹ்ரங் பலூச் மற்றும் அவரது கூட்டாளிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அங்கு நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.