`பள்ளி படிக்கும்போதே 2 கின்னஸ் சாதனைகள்; அடுத்து ஒலிம்பிக்தான்' - 9ம் வகுப்பு மாணவியின் லட்சிய பயணம்
நம்ம சென்னையில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஸ்ரீ ஓவியசேனா, ஒருமுறை அல்ல இருமுறை கின்னஸ் சாதனை படைத்து ஒலிம்பிக் கனவை நோக்கி தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சிறுவயதிலே இத்தனைச் சாதனைகளோடு கனவுகளை நோக்கிப் பயணிக்கும் ஸ்ரீ ஓவியசேனாவின் பயணம் பற்றி அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். தன் பயணத்தை விளக்க ஆரம்பித்த ஸ்ரீ ஓவியசேனா...
"நான் 5-ம் வகுப்பு படிக்கும் போதே `ஆர்ச்சுரின்னு' சொல்லப்படுகிற "வில் வித்தை" மற்றும் வளையங்களை உடம்புல சுத்திகிட்டே `ரூபிக் கியூப்' சால்வ் செய்வதற்கு பயிற்சி எடுக்க ஆரம்பிச்சிட்டேன்.
இதுல, என்னுடைய திறமைகளை கண்டுபிடிக்கிறதுல என் பெற்றோர்கள் ஒரு முனைப்பா இருந்தாங்க."

2021-ல் கின்னஸ் சாதனை!
"கொரோனா ஊரடங்கு காலத்துல விளையாட்டா ஆன்லைன்ல பார்த்து கற்று கொள்ள முயற்சி செய்தது தான் இந்த ஹுலா ஹுப்ஸ்!
அப்போதுதான் என்னுடைய திறமைகளை நானே உணர்ந்தேன். அப்றம் பயிற்சிகளை தீவிரமா மேற்கொள்ள ஆரம்பிச்சேன்.
அந்த பயிற்சிகளோட விளைவாக 2021ல 5-ம் வகுப்பு படிக்கும் போது ஒரு கால் முட்டியில் "ஹுலா ஹுப்" எனப்படும் வளையத்தினை, ஒரு நிமிடத்தில 288 முறை சுழற்றி கின்னஸ் உலக சாதனை பண்ணியிருந்தேன்."
2023-ல் மீண்டும் கின்னஸ் சாதனை!
"எனக்கு எப்பவுமே என்னை முறியடிக்கிறதுதான் குறிக்கோள். அதனால இன்னும் தீவிரமாக பயிற்சி பண்ணேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது பயிற்சி செய்வேன்.
அப்படி 2023-ல், 5 வளையங்களை உடம்புல சுழற்றிகிட்டே, 51.24 நொடிகளில் "ஒரு ரூபிக் கியூபையும்" சால்வ் பண்ணினேன். இது என்னோட இரண்டாவது கின்னஸ் உலக சாதனை!
மூன்றாவதாக, என் சாதனைய நானே முறியடிக்கும் விதமா, முன்பு பண்ண அதே செயல 44 நொடிகளில் முடித்து ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல இடம்பெற்றிருக்கேன்."

அடுத்த இலக்கு ஒலிம்பிக்தான்!
"எனக்கு தற்போது இருக்கிற மிக முக்கியமான இலக்கு, 2030-ல் ஒலிம்பிக்ஸ்-ல வில்வித்தையில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு, நம்ம நாட்ட வெற்றிபெறச் செய்யணும்.
அதற்காகத்தான் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிற்சி செய்துகிட்டு இருக்கேன்." என்று லட்சியத்தோடு கூறியவர் திறமையை வளர்த்துக் கொள்வது பற்றி கூறத் தொடங்கினார்.
ஒழுக்கமும், தொடர் பயிற்சியும்தான் வெற்றிக்கான வழி!
"என்னை பொறுத்த வரையில்,திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு 2 வழிகள் இருக்கு.
ஒன்று, பல்வேறு செயல்களில் ஈடுபடுவது மூலமாக நம்ம திறமையை நம்மால் கண்டறிய முடியும். பின்னர் அதில் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது அதில் நிபுணத்துவம் வாய்ந்த நபரா ஆகிடுவோம்.
நான் அப்படித்தான், சிலம்பம், ஒரிகாமி எனப்படும் காகிதத்தை மடித்து வெவ்வேறு உருவங்களை உருவாக்குவது, நீச்சல், ஒற்றை சக்கர மிதிவண்டி ஓட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டதால் என்னுடைய உச்சபட்ச திறமையை கண்டறிய முடிந்தது."

மற்றொன்று, ஏதாவது ஒரு செயல் அல்லது திறமை மேல நம்பிக்கை வைத்து அதையே தொடர்ந்து பயிற்சி செய்வது.
நமக்குள்ள எவ்வளவு பெரிய திறமை இருந்தாலும், ஒழுக்கத்தோடு கூடிய தொடர் பயிற்சி இருந்தாதான் வெற்றியை தொட்டுகிட்டே இருக்க முடியும். இதுதான் நான் கடந்த 7 ஆண்டுகளாக கற்றுகொண்டு, நம்புகிற விஷயம்."
அவரைத் தொடர்ந்து, அவரின் தந்தை நாகராஜனிடம் பேசிய போது,
"எல்லோரும்தான் படிக்கின்றோம். இன்றைய காலத்தில், பெரும்பாலும் அதனுடைய உச்சபட்ச இலக்கு என்பது ஒரு வேலையில் சேர்வதோடு முடிந்துவிடுகிறது.
ஆனால், திறமைக்கு எல்லையே இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
ஒரு செயலில் நம்பிக்கை வைத்து இடைவிடாது முழுமனதோட செய்யும்போது மற்றவை எல்லாம் தானாக நடக்கும் என்பதற்கு என்னுடைய மகளையே எடுத்துக்காட்டாக சொல்ல முடியும்.

இன்று வரையிலும் கல்வியிலும் முதன்மையாகத்தான் விளங்கிட்டு இருக்காங்க என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி" என்று கூறினார்.
9-ம் வகுப்பு மாணவியால், இவ்வளவு தீர்க்கமாக யோசித்து செயல்பட முடிகிறது என்றால் அதற்கு காரணம் அவருடைய திறமையும், பயிற்சியும், பெற்றோரின் வழிகாட்டலும் தான்! ஒலிம்பிக் கனவு கைகூட வாழ்த்துகள்!